கலை என்பதற்காகவே பரவட்டும், பரப்பட்டும்;சந்தோஷம்தான். ஆனாலும் ஆதியிலிருந்து இந்தக் கலைகளுக்கு எது லக்ஷ்யமாயிருந்ததோ அது மறந்து போகுமாறு விட்டுவிடக் கூடாது. ஈச்வரனிடம் கொண்டு நிறுத்துவதற்காகத்தான் இவை ஏற்பட்டிருக்கின்றன என்ற நினைப்பு போகக்கூடாது. சரபோஜி போன்ற ராஜாக்கள் கேட்டுக் கொண்டால்கூட, ராஜஸதஸில் போய்ப் பாடுவதில்லை, ‘நிதி வேண்டாம்; ஈஸ்வர ஸந்நிதிதான் வேண்டும்’ என்று வைராக்யமாயிருந்த தியாகையர்வாள் போன்ற மஹான்களின் ‘ஐடியல்’ எப்போதும் நினைவில் இருக்க வேண்டும். சாந்த ஸெளக்யத்தைத் தானும் அடைந்து, மற்றவர்களும் அடைவிக்கப் பண்ணுவதாகவே காந்தர்வ வேதத்தை அதற்கான உயர்ந்த ஸ்தானத்திலே வைத்துக் காத்துக் கொடுக்க வேண்டும்.