கோவிந்த நாமாவுக்கு இருக்கப்பட்ட அநேகச் சிறப்புக்களில் இன்னொன்று நம் ஆசார்யாளுக்கு அதுதான் ரொம்பவும் பிடித்தது -favourite- என்பது! ‘பஜ கோவிந்த’த்திலிருந்து இது தெரிகிறது. ‘பஜகோவிந்தம்’ என்பது அவருடைய ‘சிவானந்தலஹரி’, ‘ஸெளந்தர்ய லஹரி’, அல்லது இந்த ‘ஷட்பதீ’ ஸ்தோத்ரம் போல ஒரு ஸ்வாமியை ஸ்தோத்திரிக்கும் ப்ரார்த்தனை இல்லை. அதிலே ஜெனரலாக ஒரு மநுஷ்யன் இருக்கவேண்டிய வாழ்முறையையும், தத்வ உபதேசங்களையும், விவேக வைராக்யங்களையும்தான் சொல்லியிருக்கிறார். அது வைஷ்ணவர், சைவர் என்ற பேதமில்லாமல் ஸகல ஜனங்களுக்குமானது. இப்படிப்பட்ட க்ரந்தத்தில் ஆசார்யாள் ‘பராமாத்மாவை பஜியுங்கள்’ என்று பொதுப்பெயரைச் சொல்லாமல் ‘கோவிந்தனை பஜியுங்கள்’ என்று சொல்கிறாரென்றால், அந்தப் பெயரில் அவருக்கு ரொம்பவும் பிடித்தம் என்று தானே அர்த்தம் தெரிகிறது?
லோகத்தில் உள்ள உபதேச க்ரந்தங்களுக்கெல்லாம் உச்சியில் உள்ள கீதையை அர்ஜுனனுக்குச் சொன்னதால் க்ருஷ்ணருக்கு ‘ஜகத்குரு’ என்ற பட்டம் உண்டு. ‘க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்’ என்று ச்லோகம் சொல்கிறோம். அதற்கு அப்புறம் நம் பகவத்பாதாளுக்குத்தான் ஜகத்குரு பட்டம் ஏற்பட்டது. ஜகத்குருவாயினும் ஆசார்யாளுக்கு, சிஷ்யபாவத்தில் இருந்துகொண்டு தம்முடைய குருவை ஸ்துதிப்பதிலேயே ஸந்தோஷம். அவருடைய குருவின் பேர் என்ன என்றால் கோவிந்த பகவத் பாதர் என்பதே. அதனால் குரு – தெய்வம் இரண்டின் பெயராகவும் உள்ள ‘கோவிந்த’ என்னும்போது க்ருஷ்ண பரமாத்மாவை மட்டுமின்றி தம் குருவையும் ஆசார்யாள் நினைத்துக்கொண்டார் என்பதற்கு internal evidence (உட்சான்று) -ஆக ‘விவேக சூடாமணி’யின் ஆரம்ப ச்லோகத்தில்,
கோவிந்தம் பரமாநந்தம் ஸத்குரும் ப்ரணதோஸ்ம்யஹம் என்று சொல்லியிருக்கிறார்.