பிற்காலத்தில் ராமாநுஜர் இந்த சரணாகதியைத்தான் முக்யமான உபாயமாக வைத்து விசிஷ்டாத்வைத மதத்தை உருவாக்கினார். ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு முக்யமானவை அஷ்டாக்ஷரம், த்வயம் என்ற இரு மந்த்ரங்களும், கீதையின் சரம ச்லோகமான ‘ஸர்வதர்மாந் பரித்யஜ்ய’ ச்லோகமும், வீபீஷண சரணாகதியின்போது ஸ்ரீ ராமசந்த்ர மூர்த்தி தம்முடைய சரணாகத ரக்ஷக வ்ரதத்தைச் சொல்கிற ராமாயண ச்லோகமும் ஆகும்.
ராமாநுஜருக்குப் பிற்பாடு வடகலை, தென்கலை என்று இரண்டாகப் பிரிந்ததும் இந்த சரணகாதிக்குள்ளேயே இருக்கிற மாறுபாடுகளை வைத்துத்தான். பூனைக் குட்டி தனக்கென்று ஒரு ப்ரயத்னமும் இல்லாமல் கிடக்கிறதல்லவா? அதைத் தாய்ப்பூனை தானாகத் தானே வாயில் கௌவிக் கொண்டுபோகிறது? இதுமாதிரி நாம் பெருமாள் விட்ட வழி என்று கிடப்பதுதான் நிஜ சரணாகதி என்பது தென்கலைக்காரர்களின் அபிப்ராயம். இதற்கு ‘மார்ஜார கிசோர ந்யாயம்’ என்று பேர். மார்ஜாராம் என்றால் பூனை; கிசோரம் என்றால் குட்டி. ‘பூனைக்குட்டி முறை’ தான் தென்கலை. வடகலைக்காரர்களின் அபிப்ரயாம் என்னவென்றால்; ‘குரங்குக்குட்டி என்ன பண்ணுகிறது? அதுதானே தாய்க் குரங்கை இறுகக் கட்டிக்கொண்டிருக்கிறது? இந்த மாதிரி நாமேதான் ப்ரயத்னம் பண்ணி பகவானைப் பிடித்துக்கொள்ளவேண்டும். இந்த ஒரு யத்னம் தவிர பாக்கி விஷயங்களில்தான் அவன் விட்ட வழி என்று இருக்க வேண்டும்’ என்று ‘மர்க்கட கிசோர ந்யாய’மாக இவர்கள் சரணாகதியைச் சொல்கிறார்கள். ‘மர்க்கடம்’ – குரங்கு. ‘மர்க்கட கிசோர ந்யாயம்’ – குரங்குக் குட்டி முறை.
இரண்டிற்கும் basic -ஆக (அடிப்படையாக) இருப்பது சரணாகதி.
‘தானே ப்ரஹ்மம்’ என்கிற ப்ரஹ்மபாவனை ஞான மார்க்த்துக்கு மையமாக இருக்கிற மாதிரி, ‘தான் ஒன்றுமே இல்லை’ என்று பகவானிடம் சரணாகதி செய்து கிடப்பது பக்தி மார்க்கத்துக்கு மையமாக இருக்கிறது. இந்த இரண்டும் ஒன்றேதான்.
‘அதெப்படி? ஒன்றுக்கொன்று மலைக்கும் மடுவுக்குமாக அல்லவா இருக்கிறது?’ என்று மேலெழுந்தவாரியாகப் பார்க்கிறபோது தோன்றும். ஆழ்ந்து பார்த்தால் இரண்டும் ஒன்றுதான். ‘தானே ப்ரஹ்மம்’ என்கிறபோது சொல்கிற ‘தான்’ வேறு, ‘தான் ஒன்றுமே இல்லை’ என்று சொல்கிற ‘தான்’ வேறு! தானே ப்ரஹ்மம் என்று அத்வைதி சொல்கிறபோது தன்னுடைய சரீரம், இந்த்ரியம், புத்தி, மனஸ் இந்த எதுவும் நிஜமான தான் இல்லை என்று தள்ளிவிட்டு, மிஞ்சி நிற்கிற ஆத்மாவைத்தான் ப்ரஹ்மம் என்கிறான். ‘ஸாதாரணமாக எந்த ஜீவாத்மாவும் அஞ்ஞானத்தினால் ‘தானாக’ நினைக்கும் இந்த சரீரம், இந்த்ரியம், புத்தி, மனஸ் இதுகளிலிருந்தெல்லாம் நாம் விடுபடவேண்டும். இவை இழுத்துக்கொண்டு போகிறபடி ஓடாமல் இவற்றை இறைவனின் பொற்பாத கமலங்களில் ஒன்றுமேயில்லை என்கிற மாதிரி கிடத்திவிட வேண்டும்’, என்கிற அர்த்தத்தில்தான் ‘தான் ஒன்றுமேயில்லை’ என்று பக்தி மார்க்கக்காரன் சரணாகதி பண்ணுகிறான். அத்வைதி ‘தானாக’ச் சொல்லும் ஆத்மாவுக்கு அந்யமாக அவன் தள்ளுவதையேதான் த்வைத, விசிஷ்டாத்வைதிகள் ‘தான்’ என்று வைத்து பகவானின் பாதத்தில் தள்ளுகிறார்கள்! ஆகையால் இரண்டும் ஒன்றுதான். அஹங்காரம் ( ego) போகவேண்டும் என்பதுதான் இரண்டு மார்க்கத்துக்கும் பொதுவான லக்ஷ்யம்.
அத்வைத பாஷ்யங்களிலும் ப்ரகரண க்ரந்தங்களிலும் ஞான மார்க்கத்தைச் சொன்ன ஆசார்யாள் இங்கே பக்தராக இருந்து, அதே லக்ஷ்யத்துக்கு சரணாகதியை வழியாகச் சொல்லியிருக்கிறார். ‘சரணம் கரவாணி தாவகௌ சரணௌ – உன் இணையடிகளில் சரணாகதி செய்கிறேன்’ என்கிறார்.
‘கருணமாய’ என்றதால் கருணைக் கடலான பகவான் சரணாகதனை நிச்சயம் ரக்ஷிப்பான் என்று உணர்த்துகிறார்.
நாராயண கருணாமய
முதல் ச்லோகத்தில் ‘விஷ்ணோ’ என்று ஆரம்பித்து விட்டு, ஆறாவது ச்லோகத்தில் ‘தாமோதர’ என்று க்ருஷ்ணாவதாரத்தைச் சொல்லி அழைத்தவர், இங்கு ‘நாராயண’ என்கிறார். மதத்தின் பெயரைப் பார்க்கும்போது ‘விஷ்ணு’வின் பெயரை வைத்து அது ‘வைணவம்’ எனப்பட்டாலும், அதற்கு முக்யமான அஷ்டாக்ஷரீ மந்த்ரத்தில் ‘நாராயண’ நாமம்தான் வருகிறது. ‘கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்’ என்று ஆழ்வாரும் பாடியிருக்கிறார். ஆசார்யாளே தமது அத்வைத பாஷ்யங்களில் ஸகுண ப்ரஹ்மத்தைச் சொல்லும்போது நாராயணன் என்றே குறிப்பிட்டிருக்கிறார். ஸந்யாஸிகளுக்கு யார் நமஸ்காரம் பண்ணினாலும் அவர்கள் ‘நாராயண நாராயண’ என்றே ஆசிர்வதிக்கணுமென்று அவர் ஏற்பாடு பண்ணியிருக்கிறார்.
இங்கே ஆசார்யாள், ‘நாராயணனின் சரணத்தை நான் சரண் அடைகிறேன்’ என்கிறார் அல்லவா? இதே அர்த்தத்தில் தான், ஏறக்குறைய இதே வார்த்தைகளிலேயே வைஷ்ணவர்கள் த்வய மந்த்ரம் இருக்கிறது.
இந்த மாதிரி அத்வைத, விசிஷ்டாத்வைத ஒற்றுமைகளைப் பார்க்கிறபோது ரொம்பவும் ஸந்தோஷமாயிருக்கிறது.