‘சங்கர விஜய’ங்களும் ஆசார்யாள் குறித்த மற்ற நூல்களும் – (சிதம்பரமும் ஆசார்யாளும்)

(சிதம்பர ஸமாசாரம் கொஞ்சம் சொல்லவேண்டும்.

ஆசார்யாளுக்கும் சிதம்பரத்திற்கும் ஸூக்ஷ்மமாக ஒரு ஸம்பந்தம் இருந்திருப்பதாகத் தெரிகிறது. அவர் பரமேச்வரனிடமிருந்து பெற்ற ஐந்து ஸ்படிக லிங்கங்களில் ஒன்றை ச்ருங்கேரியிலும், இன்னொன்றை இங்கேயும் (காஞ்சி ஸ்ரீமடத்திலும்) ஸ்தாபித்தது போல பாக்கி மூன்றை மூன்று ப்ரஸித்த க்ஷேத்ரங்களில் ப்ரதிஷ்டை செய்திருக்கிறார். அந்த மூன்றில் இரண்டு ஹிமாசலத்திலேயே உள்ள கேதாரிநாதமும், நேபாளத்திலுள்ள நீலகண்ட க்ஷேத்ரமுமாகும். மற்றது எதுவென்றால் சிதம்பரம்தான். தாம் ஸித்தி அடைகிற பர்யந்தம் தம்மிடமே ஆசார்யாள் வைத்துக்கொண்டிருந்த லிங்கத்தை அந்த ஸமயம் நெருங்கும்போது ஸுரேச்வராசார்யாளிடம் கொடுத்து சிதம்பரத்தில் ப்ரதிஷ்டை பண்ணச் சொன்னாரென்று ஆனந்தகிரீயத்தில் இருக்கிறது.

சிதம்பரம் பரம வேதாந்த தாத்பர்யங்களைக் குறிக்கும் க்ஷேத்ரம். (சிதம்பரம் என்ற) அந்தப் பேரே வேதாந்தமானது. “ஞான ஆகாசம்” என்று அர்த்தம். ஸாதாரணமாக க்ஷேத்ரப் பெயர்கள் புராணக் கதைகளைக் குறிப்பதாக இருப்பதே வழக்கம். காளஹஸ்தி, அருணாசலம், ஜம்புகேச்வரம்-கஜாரண்யம்-திருவானைக்கா என்ற பெயர்கள் அந்தந்த ஸ்தல புராண ஸம்பந்தமுள்ளவைதான். ‘சிதம்பரம்’ என்ற பெயர் மாத்திரம் வேதாந்தமாக இருக்கிறது. வ்யாக்ரபுரம்-புலியூர் என்று புராண ஸம்பந்தமுள்ளதாக அதற்கு ஒரு பெயர் இருந்தாலும் சிதம்பரம் என்பதுதானே ப்ரஸித்தமாயிருக்கிறது? “திருச்சிற்றம்பலம்” என்று திருமுறைகளை ஆரம்பிக்கிறார்கள்- அதுவும் வேதாந்தப் பேர்தான். ‘தஹராகாசம்’ என்று நம் ஹ்ருதய குஹையில் ஆத்ம ஸ்தானமாக இருப்பதைத்தான் ‘சிறு அம்பலம்’ என்பது. ஸ்வரூப நடராஜா பஞ்ச க்ருத்யம் செய்வதற்குப் பக்கத்திலேயே அரூபமாக, நிஷ்க்ரியமாக உள்ள ஆகாசத்தை ‘ரஹஸ்யம்’ என்று அங்கே வைத்திருக்கிறது. ஆகாச க்ஷேத்ரமென்றால் ether என்ற ஸூக்ஷ்ம பூதத்தைக் குறிப்பது மட்டுமில்லை; ஆத்ம தத்வத்தையேதான் ஆகாசம் என்பது. யோக – வேதாந்த ப்ரகரணமான ‘யோகதாராவளி’யில் ஆசார்யாள் ஸ்ரீசைலத்தைக் குறிப்பிட்டிருப்பதற்கு விசேஷமுண்டு என்பது போலவே, ‘விவேக சூடாமணி’யில் அவர் ‘சிதம்பரம்’ என்ற வார்த்தையைக் குறிப்பிட்டிருக்கிறார். புஸ்தகத்தின் கடைசி பாகத்தில் ஜீவன் முக்தனை வர்ணிக்கும்போது, வாஸ்தவத்தில் அவன் நிலைபெற்றிருப்பது ஞான ஆகாசத்திலேயே ஆனதால், வெளிப்பார்வைக்கு எப்படி வேண்டுமானாலும் கூத்தடிப்பான், பைத்தியம் மாதிரி இருப்பான், பச்சைக் குழந்தையாட்டம் இருப்பான், பிசாசு மாதிரிகூட இருப்பான், எல்லாவற்றையும் அவிழ்த்துப் போட்டுவிட்டுத் திரிவான், இல்லாவிட்டால் மான்தோல், புலித்தோல் எதை வேண்டுமானாலும் போட்டுக்கொண்டிருப்பான் என்று சொல்கிறார். அப்போது அவனை ‘ஞானாகாசத்தில் நிலைபெற்றவன்’ என்பதற்கு “சிதம்பரஸ்த:” என்றே போட்டிருக்கிறார்1.

ஆசார்யாள் பிறந்த மலையாள தேசத்திற்கு ஒட்டினாற் போல கொங்கு நாட்டில் பேரூர் என்ற நடராஜ க்ஷேத்ரம் இருக்கிறது. ஆசார்யாள் அவதாரத்திற்காக மாதா பிதாக்கள் பஜனம் இருந்த திருச்சூரும் திருச்சிவப்”பேரூர்”தானே? பேரூருக்கு ஆதி சிதம்பரம் என்றும் பெயரிருக்கிறது!

அம்பலம் என்று ஸந்நிதிகளைச் சொல்கிற வழக்கம் மலையாளத்தில்தான் இருக்கிறது. சிற்றம்பலம், பொன்னம்பலம், வெள்ளியம்பலம் என்றெல்லாம் நடராஜ ஸந்நிதியைத்தான் தமிழ் தேசத்தில் சொல்கிறோம். இந்த அம்பலத்தின் விமானமும் தமிழ்நாட்டில் இதர ஸந்நிதிகளிலுள்ள கோபுர பாணியில் இல்லாமல் மலையாளக் கூரை கட்டுமான பாணியிலேயே இருக்கிறது. சிதம்பரத்து தீக்ஷிதர்கள் குடுமியைப் பின்பக்கம் முடியாமல் நம்பூதிரிகளைப்போல் முன்பக்கம் முடிகிறார்கள். நம்பூதிரிகள் நேர் உச்சியில் ஊர்த்வ சிகையாக முடிந்தால், இவர்கள் இன்னம் முன்பக்கம் கொஞ்சம் பக்கவாட்டாகப் பூர்வ சிகையாக முடிகிறார்கள். ஆகக்கூடி, பின்னால் முடித்துக்கொள்ளாத ஒற்றுமை இருக்கிறது.)

தீக்ஷிதர்களுக்கு மலையாள ஸம்பந்தம் விசேஷமாக இருந்ததைக் காட்டுகிற மாதிரி பெரிய புராணத்தில் ஒரு விஷயம் வருகிறது. கூற்றுவ நாயனார் என்று ஒருத்தர். அவர் ஒரு குறுநில மன்னர்; சோழ தேசத்திலிருந்த களந்தை என்ற ஊரில் இருந்து கொண்டு சுற்றுப்பட்ட சின்ன ப்ரதேசத்தை ஆண்டு கொண்டிருந்தவர்; சோழ ராஜாவுக்குக் கப்பம் கட்டிக்கொண்டிருந்தவர். அவர் பஞ்சாக்ஷர ஜப பலத்தினால் ராஜ்யம் ராஜ்யமாக ஜெயித்து சோழ ராஜாவையுங்கூட முடிவாக ஜெயித்து விட்டார்.

சோழ ராஜாக்களுக்கு நடராஜா குல தெய்வம். தீக்ஷிதர்கள் அவர்களுக்குச் சிதம்பரத்தில் பட்டாபிஷேகம் பண்ணி முடி சூட்டுவார்கள். உறையூர், தஞ்சாவூர் மாதிரியான தங்களுடைய தலை நகரங்களிலும் சோழ ராஜாக்கள் பட்டாபிஷேகம் பண்ணிக் கொண்டாலும் அது ‘அஃபீஷியல்’ மட்டுந்தான். ‘ஸோஷல்’ என்றும் சொல்லலாம்.  தெய்வ ஸம்பந்தமான ஸமயச் சடங்காக ‘ஸாக்ரமென்டல்’ என்கிறபடி நடக்கும் பட்டாபிஷேகம் சிதம்பரத்தில் தீக்ஷிதர்கள் பண்ணி வைக்கிறதுதான். அப்போது சூட்டுகிற கிரீடமும் அந்த ஒரு ‘அக்கேஷ’னுக்கு மட்டுந்தான். மற்ற சமயங்களில் அது தீக்ஷிதர்களின் ‘கஸ்டடி’யிலேயே சிதம்பரம் கோவிலில் இருக்கும்.

கூற்றுவ நாயனார் சோழ தேசம் பூராவையும் ஜெயித்துவிட்டு தீக்ஷிதர்களிடம் போய்த் தனக்கு முடி சூட்டும்படிக் கேட்டுக் கொண்டார். ஆனால் அவர்கள், ‘சோழ வம்சத்தில் வந்தவர்களைத் தவிர நாங்கள் யாருக்கும் முடிசூட்ட மாட்டோம்’ என்று சொல்லிவிட்டார்கள். ராஜாவோடு அபிப்ராய பேதமாகப் போன பிறகு அந்த ராஜ்யத்தில் வஸிக்கிறது உசிதமில்லை என்றும் அவர்கள் நினைத்தார்கள். அதனால், கிரீடத்தைக் கோவிலிலிருந்து அப்புறப்படுத்தக்கூடாது என்பதால் அதற்கு ‘கஸ்டோடிய’னாக ஒரு தீக்ஷிதரை மட்டும் வைத்துவிட்டு, மற்றவர்கள் ஊரை விட்டுப் புறப்பட முடிவு செய்தார்கள்… ஒரே ஒரு தீக்ஷிதர் விலை மதிப்பில்லாத கிரீடத்தைக் காவல் காத்துக் கொண்டிருந்தாலும் ஒரு ராஜா அவரை பலாத்காரம் பண்ணி முடிசூட்டுப் பெறாமல் அடங்கியிருப்பான் என்ற உத்தமமான பண்பாடும் இங்கே தெரிகிறது….

சோழ ராஜ்யத்தை விட்டு தீக்ஷிதர்கள் எங்கே போனார்கள் என்று பெரிய புராணத்தில் சொல்கிறபோது, அவர்கள் சேரனுடைய மலையாள தேசத்துக்குப் போய்விட்டார்கள் என்று இருக்கிறது (“சேரலன்றன் மலைநாடணைய நண்ணுவார்” — கூற்றுவ நாயனார் புராணம், 4). பாண்டிய தேசத்துக்குப் போகாமல் அதைவிட எவ்வளவோ தூரம் தள்ளியிருந்த மலையாளத்துக்குப் போனதாக இருக்கிறதைப் பார்க்கும்போது தீக்ஷிதர்களுக்கு அந்த ப்ரதேச ஸம்பந்தம் ஜாஸ்தி என்பதாலேயே இப்படியோ என்று தோன்றுகிறது.

அப்புறம் அந்த நாயனார் நடராஜாவிடம், ‘உன் குஞ்சித பாதத்தைத்தான் நீ என் முடியில் சூட்டணும்!’ என்று ப்ரார்த்தித்துக் கொண்டதாகவும், ஸ்வாமியும் ஸ்வப்னத்தில் தோன்றி அப்படியே செய்ததாகவும் இருக்கிறது. பிற்காலத்தில் ராஜராஜனும் ‘சிவபாதசேகரன்’ என்று இதே தாத்பர்யத்தில்தான் தன்னைச் சொல்லிக்கொண்டான்.

ஆசார்யாள் சிதம்பரத்தில் பிறந்ததாகச் சொல்லியுள்ள பாடத்தில் அவருடைய தகப்பனார் பெயர் விச்வஜித், தாயார் பெயர் விசிஷ்டா என்று எல்லாமே வித்யாஸமாயிருக்கிறது! ‘என்ன இப்படியிருக்கே?’ என்று ஆராய்ந்து கொண்டு போனால் அபிநவ சங்கரர் என்று சொன்னேனே, கி.பி. 788-ம் காலத்தவர் என்று, அவருக்கு இதெல்லாம் பொருந்தியிருக்கிறது! அவர் சிதம்பரத்தில்தான் அவதரித்திருக்கிறார். அப்பா பேர் விச்வஜித், அம்மா விசிஷ்டா2. இரண்டு பேருக்கும் மாறாட்டம் ஏற்பட்டுப் பாடம் மாறியிருக்கிறதென்று புரிகிறது.

ஆனந்தகிரிக்கும் அலாதியாக ஒரு சிதம்பரப் பற்றுதல் இருந்ததாகத் தெரிகிறது. (ஆனந்தகிரீய) புஸ்தகத்தின் எல்லாப் பாடங்களிலுமே குழந்தை சங்கரர் வளர்ந்ததைச் சொல்லும்போது “ஸாக்ஷாத் சிதம்பரேச இவ விராஜமாந: — ஸாக்ஷாத் நடராஜாவைப்போலவே ப்ரகாசித்தவர்” — என்று சொல்லியிருக்கிறது.3

ஆசார்யாள் கோவிந்த பகவத்பாதரை ஸந்தித்து உபதேசம் பெற்றது சிதம்பரமென்றே ஆனந்கிரீயத்தின் எல்லாப் பாடங்களிலும் இருக்கிறது4. ஆசார்யாள் பற்றிய இதர புஸ்தகங்களில் அந்த இடம் நர்மதா தீரம், பதரி, காசி என்றெல்லாம் வித்யாஸமாகச் சொல்லப்பட்டிருந்தாலும் பரவலான ஐதிஹ்யம் நர்மதா தீரம் என்றே இருப்பதை கவனிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

அந்த உபதேசத்தின்போது வெளிலோகத்திற்குத் தெரியாவிட்டாலும் உள்ளூரச் சிதம்பர ஸம்பந்தம் இருந்ததாக வைத்துக்கொள்ளலாம். எப்படியென்றால்…. கோவிந்த பகவத்பாதர் யார்? பதஞ்ஜலி அவதாரம்தான். பதஞ்ஜலி சிதம்பரத்தோடு இணைபிரியாமல் சேர்ந்தவர். (ஆசார்யாளின்) குரு இப்படியென்றால் பரமகுருவான கௌடபாதரும் சிதம்பரத்தில்தான் பதஞ்ஜலியிடம் அவர் பதஞ்ஜலி ரூபத்திலிருந்தபோதே வ்யாகரண உபதேசம் பெற்றவர். ஆசார்யாளோ தத்வரீதியில் எப்போதும் ‘சிதம்பரஸ்தர்.’ அதனால் அவரை ஞானாகாசத்திலேயே வைத்து குரு உபதேசித்ததை “சிதம்பரத்தில் உபதேசித்தார்” என்று எழுதிவிட்டார் என்கலாம்!)

காசியில் தீண்டாதானின் ரூபத்தில் விச்வநாதரே வந்து ஆசார்யாளைப் பரீக்ஷித்தது, தாயாரின் மரண ஸமயத்தில் ஆசார்யாள் அவள்கிட்டே போய் விச்ராந்தி பண்ணிப் புண்ய லோகம் அனுப்பியது முதலான வ்ருத்தாந்தங்கள் ஆனந்தகிரீயத்தில் இல்லாவிட்டாலும், மற்ற புஸ்தகங்களில் இருப்பதாலும், லோக வழக்கிலும் ப்ரஸித்தமாயிருப்பதாலும் அவற்றைச் சேர்த்துக்கொள்ள வேண்டியதுதான்.

ஆசார்யாள் ஷண்மத ஸ்தாபனம் பண்ணியதை விளக்கமாகச் சொல்கிற புஸ்தகம் ஆனந்தகிரீயம்தான். ஆனாலும் பொது அபிப்ராயத்தில் ஷண்மதம் என்றால் சிவன், அம்பாள் விஷ்ணு, பிள்ளையார், ஸுப்ரஹ்மண்யர், ஸூர்யன் ஆகிய ஆறு பேரைக் குறித்த உபாஸனை என்று இருந்தாலும் இதில் ஸுப்ரஹ்மண்ய மதமான கௌமாரத்துக்கு பதில் காபாலிகத்தைச் சொல்லியிருக்கிறது5. இதே சரித்ரத்தில் முன்னாடி ஆசார்யாள் நிராகரணம் செய்த 72 மதங்களில் பலவற்றை ஒவ்வொரு ப்ரகரணத்தில் ஒவ்வொன்றாகக் கொடுக்கும்போது காபாலிகத்தை அவர் கண்டனம் செய்த கதையும் இருக்கிறது6. ஆனால் பிற்பாடு அவர் ஐந்து சிஷ்யர்களைக் கொண்டு சைவம்-சாக்தம்-வைஷ்ணவம்-காணபத்யம்-ஸெளரம் ஆகியவற்றை ஸ்தாபித்த அப்புறம் காபாலிகரான வடுகநாதர் என்பவர் அவரிடம் வந்து தம்முடைய மதத்தையும் பரப்ப அவர் அநுக்ரஹிக்கணும் என்று கேட்டுக்கொண்டதாகவும், பூர்வ பக்ஷமாக — அதாவது, எதிர்க் கட்சியும் என்னவென்று கொஞ்சம் தெரிந்தால் நல்லதுதானே என்கிற ரீதியிலும் வைதிகாசாரங்களை அநுஸரிப்பதற்கில்லாமல் ப்ரஷ்டர்களாகப் போனவர்களை உத்தேசித்தும் அவர், “ஸரி, உன் மதத்தையும் கொஞ்சம் ப்ரசாரம் பண்ணி விட்டுப்போ!” என்று உத்தரவு கொடுத்ததாகவும் வருகிறது. அவர் (வடுகநாதர்) அப்படியே பண்ணிவிட்டு மறுபடி காஞ்சீபுரத்துக்கு வந்து, மற்ற ஐந்து மதங்களை ப்ரசாரம் பண்ணிவிட்டு அங்கே திரும்பி வந்திருந்த மற்ற ஐந்து சிஷ்யர்களுக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தாரென்று வருகிறது.

ஜன ஸமூஹத்தில் உள்ள ஐதிஹ்யமோ கௌமாரம் உட்பட்ட ஷண்மதங்களை ஆசார்யாள் ஸ்தாபித்தாரென்பதாகத்தான் இருக்கிறது. அந்த ஐதிஹ்யம் இருக்கட்டும். தர்ம சாஸ்த்ர நிபந்தன க்ரந்தம் என்பதாக ப்ராமாண்யம் பெற்றுள்ள ‘பராசர மாதவீயம்’என்ற நூலிலும்,

சைவம் ச, வைஷ்ணவம், சாக்தம், ஸெளரம் வைநாயகம் ததா |
ஸ்காந்தம் ச பக்தி – மார்கஸ்ய தர்சநாநி ஷடேவ ஹி ||

என்று முருக உபாஸனையான கௌமாரத்தையே ‘ஸ்காந்தம்’ என்று ஆறாவது மதமாகச் சொல்லியிருக்கிறது.

சாஸ்த்ர ப்ரகாரமே எல்லாம் பண்ணின ஆசார்யாள் கௌமாரத்தை விட்டிருப்பாரா?

ஆனந்தகிரீயத்திலேயே ஆரம்ப ப்ரகரணமொன்றில்7 ஆசார்யாள் அனந்தசயன க்ஷேத்ரத்திலிருந்து குமாரஸ்வாமி ஆவிர்பவித்த ஸ்தலமான ஸுப்ரஹ்மண்யம் என்ற க்ஷேத்ரத்திற்குப் போனார் (உடுப்பி கிட்டே கூகே ஸுப்ரஹ்மண்ய ஸ்தல என்று சொல்லப்படும் க்ஷேத்ரமாயிருக்கலாம்; அங்கே குமாரதாரை என்ற நதியில் ஸ்நானம் பண்ணிவிட்டு, ஸர்ப்ப ரூபத்திலிருக்கும் ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமியை பக்தியோடு வழிபட்டாரென்று வருகிறது8. (நான் சொன்ன ஸுப்ரஹ்மண்ய ஸ்தலத்தில் ஸ்வாமி ஸர்ப்ப ரூபத்தில் தானிருக்கிறார். கர்நாடக-ஆந்த்ர தேசங்களில் அப்படித் தான் வழக்கம்.) தவிரவும் ஆசார்யாளின் ஸ்தோத்ரங்களில் ஸுப்ரஸித்தமாக இருக்கிற ஒன்று ‘ஸுப்ரஹ்மண்ய புஜங்கம்’. பரம பக்தியும் கவித்வமும் லளிதமாகச் சேர்ந்து பாராயண க்ரந்தமாக அது இருக்கிறது. திருச்செந்தூர் முருகன்மேல் பாடியது. ஆசார்யாளும் நரலீலையாக அவதார விளையாட்டு விளையாடியதில், க்ரூர ஸ்வபாவம் படைத்த ஒரு எதிர் ஸித்தாந்தி அவருக்கு ஆபிசாரம் (செய்வினை) பண்ணியதை ஏற்றுக்கொண்டு சரீர உபாதைப்பட்டபோது திருச்செந்தூருக்கு வந்து ஸ்வாமியை ஆராதித்து, அந்த க்ஷேத்ரத்திற்கே உரியதான பன்னீரிலை விபூதியினால் ரோக நிவ்ருத்தி பெற்றார் என்று அங்கே ஸ்தல மாஹாத்ம்யம் சொல்கிறார்கள். பன்னீரிலையில் வைத்து அங்கே விபூதி தருவதை ஆசார்யாளே ‘பத்ரபூதி ‘என்று சொல்லி, அதை இட்டுக்கணுமென்றுகூட இல்லாமல் பார்த்த மாத்திரத்திலேயே மஹா ரோகங்களும் ஆவி சேஷ்டைகளும் கூடப் பிசுபிசுவென்று தேய்ந்து போய்விடுமென்று ‘புஜங்க’த்தில் சொல்லியிருக்கிறார் :

அபஸ்மார-குஷ்ட-க்ஷயார்ச-ப்ரமேஹ
ஜ்வரோந்மாத குல்மாதி-ரோகா மஹாந்த : | 
பிசாசாச்ச ஸர்வே பவத்-பத்ரபூதிம்
விலோக்ய க்ஷணாத் தாரகாரே த்ரவந்தே || 9

ஸம்ஸ்க்ருதத்தில் ஸுப்ரமண்யரைப் பற்றிய ஸ்தோத்ரம் என்றாலே முதலில் நிற்பது ஆசார்யாளின் புஜங்கம்தான்.

இதையெல்லாம் கவனிக்கும்போது அவர் ஷண்மதங்களில் ஒன்றாக கௌமாரத்தையே ஸ்தாபித்து, ‘அடிஷன’லாகக் காபாலிகத்திற்கும் கொஞ்சம் இடம் கொடுத்திருக்கலாமென்று தோன்றுகிறது.

இப்படியெல்லாம் தீர ஆலோசித்து, பூர்வகாலத்திலும் பிற்காலத்திலும் தோன்றிய பொதுப்படையான நூல்களில் சொல்லியிருப்பவை, எல்லா நூல்களிலுமே பொதுவாகச் சொல்லியிருப்பவை, ஜனங்களிடம் பரவலாகவும் ஆழமாகவுமுள்ள ஐதிஹ்யங்கள் ஆகியவற்றை இசைத்துப் பார்த்துச் சேர்க்கவேண்டியதைச் சேர்த்து, எடுக்கவேண்டியதை எடுத்து விட்டு ‘ஆனந்த கிரீய’த்திலும் ‘வ்யாஸா சலீய’த்திலும் சுத்த பாடங்களை ஒருவாறு நிர்ணயம் பண்ணி, இரண்டுக்குள்ளேயே ஒன்றில் சொல்லி ஒன்றில் விட்டதை ஒன்று சேர்த்து விட்டோமானால் ப்ராமாண்யமுள்ள ஆசார்ய சரித்ரம் கிடைத்துவிடும் எனலாம்.10

ப்ரமாணமுள்ள சரித்ரம் என்று ஒருவாறு நிர்ணயம் செய்ததற்கு விரோதமில்லாத வரையில் அதிகப்படியான எல்லாக் கதைகளையும், ஐதிஹ்யங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

புத்தியால் ஆலோசித்தால் மட்டும் போதாது. பக்தியும், விநயமும் — ஒன்று இருந்தாலே மற்றது வந்துவிடும்-ரொம்ப அவச்யம். ‘நம் அபிமானம்’ ‘நம் அபிப்ராயம்’ என்று வீம்பாகப் பிடித்துக்கொள்ளாமல், ‘ஸத்யம் தெரியணும்’ என்ற ப்ரார்த்தனையோடு ஆராய்ந்து பார்த்தால் நம் புத்தியைப் பொறுத்து, பக்தியைப் பொறுத்துத் தெரிகிற மட்டும் தெரியும்.

பக்தியோடு எல்லா சரித்ரங்களையுமே படித்துக் கதை வழியாக ஆசார்ய ஸ்மரணம் பண்ணி அவருடைய அநுக்ரஹத்தை அடையவேண்டியது. நமக்கு முக்யம் அந்த அநுக்ரஹந்தான்.


1 திகம்பரோ வாபி ச ஸாம்பரோ வா
த்வகம்பரோ வாபி சிதம்பரஸ்த: |
உந்மத்தவத்வாபி ச பாலவத்-வா
பிசாசவத்-வாபி சரத்யவந்யாம் ||

2 “ஜகத்குரு ரத்னமாலா ஸ்தவத்”தின் 61-வது ச்லோகத்திற்கு “ஸுஷமா” வ்யாக்யானத்தில் காணப்படும் வாக்பதிபட்டரின் “சங்கரேந்த்ர விலாஸ” மேற்கோள் இவ்விஷயத்தைத் தெளிவுற விளக்குகிறது.

3 ‘ஆனந்தகிரீய சங்கரவிஜயம்’ — மூன்றாவது ப்ரகரணம்.

4 ‘ஆனந்தகிரீய சங்கரவிஜயம்’ — மூன்றாவது ப்ரகரணம்.

5 72-வது ப்ரகரணம்.

6 23-வது ப்ரகரணம்.

7 11-வது ப்ரகரணம்

8 ஸ்நாத்வா குமாரதாராயாம் நத்யாம் சிஷ்ய-ஸமந்வித: |
பக்த்யா ஸம்பூஜயாமாஸ ஷண்முகம் சேஷ ரூபிணம் ||

9 ச்லோகம் 25

10 அச்சிட்ட நூல்களாக உருப்பெறுமுன் சுவடிகளில் எழுதப்பட்டும் காலப்போக்கில் ஒரு சுவடிக் கட்டு சிதிலமாகும்போது இன்னொன்றில் ப்ரதி செய்யப்பட்டே ஸ்ரீ சங்கர சரிதங்கள் நமக்குக் கிடைத்துள்ளன.

‘ஆனந்த கிரீய’த்தில் முந்தைய, பிந்தையப் பொது நூல்களுக்கு மிகவும் இசைவுள்ளதாகக் காசியில் ராம தாரக மடத்திலுள்ள கையெழுத்துப் ப்ரதிதான் தற்போது கிடைத்துள்ள ப்ரதிகளுள் மிகவும் பழையதாகத் தெரிகிறது. சாலிவாஹன சகம் 1737 (கி.பி. 1815)-இல் எழுதப்பட்டதாக அதிலேயே கண்டுள்ளது. அப்பாடத்தையே மிகப் பெரும்பாலும் ஒத்துள்ள வேறிரு கைப் பிரதிகள் காஞ்சி ஸ்ரீமட நூலகத்திலும், சென்னை மானுஸ்க்ரிப்ட் லைப்ரரியிலும் உள்ளன. இவற்றை இணைத்தும், மைஸூர் ஓரியண்டல் ரிஸர்ச் இன்டிட்யூட்டிலுள்ள நான்கு கைப் பிரதிகளுடன் ஒப்பு நோக்கியும் முக்ய பாடமாகக் கொடுத்து ஓர் ஆனந்தகிரீயப் பதிப்பை டாக்டர் என்.வீழிநாதன் அளித்திருக்கிறார். இவற்றுக்கு மாறாக உள்ள பல பாடபேதங்களையும் அடிக்குறிப்புக்களில் கொடுத்துள்ளார். சென்னைப் பல்கலைக் கழகத்தின் Center of Advanced Study in Philosophy-இன் பிரசுரமாக நூல் 1971-இல் வெளியாயிற்று.

‘வியாஸாசலீய சங்கர விஜயம்’ சென்னை மானுஸ்க்ரிப்ட் லைப்ரரியின் பதிப்பாக 1954-இல் வெளியாயிற்று. டாக்டர் டி.சந்திரசேகரன் பல பாட பேதங்களை ஒப்பு நோக்கி உருவாக்கியது. இந்நூலின் கடைசி ஸர்க்கத்தில் விடுபட்டுப்போய், ஆனால் ‘(ஜகத்)குரு ரத்னமாலா (ஸ்தவ)’த்தின் ‘ஸுஷமா’ வ்யாக்யானத்தில் காணப்படுவதான ஐந்து மேற்கோள் ச்லோகங்கள் முன்னிணைப்பாகச் சேர்க்கப்பட்டுள்ளன. ஆசார்யாள் காசியில் வஸிக்கையில் அவரை விச்வநாதப் பெருமான் தீண்டாதான் உருவில் வந்து பரீக்ஷித்ததைக் கூறும் ‘குரு ரத்ன மாலா’வின் 20-வது ச்லோகத்துக்கு ‘ஸுஷமா’ அளிக்கும் விரிவுரையில் இதே கட்டத்தைக் கூறும் வ்யாஸாசலீய மேற்கோளாக 27 ச்லோகங்கள் காணப்படுகின்றன. இவை அச்சிட்ட நூலில் விடுபட்டுள்ளன. எனவே அச்சிட்ட நூலோடு ‘ஸுஷமா’வில் காணும் கூடுதலான மேற்கோள்களையும் சேர்த்துக் கொண்டால் வ்யாஸாசலீயத்தின் முழு வடிவம் தெரியக்கூடும்.

If you see any errors in the text, please leave a comment